விஞ்ஞானமோமுன்செலுத்த
மெய்ஞானமோ பின்செலுத்தி
விதி விளையாடி கொண்டு தான் இருக்கிறது
என் சிந்தையுடன் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி..
காலத்திற்கு ஏற்றது போல் மாறதான் வேண்டும் என்றாலும்
காலத்தை காட்டும் கடிகாரமோ
கடிகார திசை மறுத்து எதிர்திசையில்
சுழன்றதாய்
வரலாற்று சரித்திரமும் இல்லை.
வருங்காலமும் அதை வரவேற்பதாய் தெரியவில்லை
எந்நாளும் மாற்றத்தை மறுப்பவள் அல்ல நான்
மலர்ச்சி தரும் மாற்றத்தை மதிப்பவள் தான் நான்
பூமி தன்னை தானே சுற்றிக் கொள்வதும் ஒரு மாற்றம் தான்
சூரியனை சுற்றி வருவதும் ஒரு மாற்றம் தான்
இவ்விரு மாற்றம் கண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனித இனம்
பூமி தன் சுற்றுப்பாதையில் சற்று விலகிச்
சுற்றும் மாற்றத்தை மட்டும் மறுப்பதில் தவறேதும் உண்டோ?
எனவே ஊருடன் ஒத்து வாழ துணிவேன்
ஒருபோதும் ஊருக்காக எனக்கு ஒவ்வாத ஒன்றாய்
வாழ துணியேன்
பழமையில் ஊறி திளைத்த என் மனம்
புதுமையை வெறுத்ததில்லை ஓர் நாளும்..
பொறுத்திருப்பேன் பொறுமையுடன் புதுமையும்
எனக்கேற்ற பழமையாய் மாறும் வரை..