செவ்வாய், 20 நவம்பர், 2012

கவிதையை கலாய்போம்.!!

கவிதை விரும்பிகள் தயவு செய்து கடுப்பாக வேண்டாம். நான் கலாய்க்க போறது, கவிதை என்கிற பெயரில் இங்க கிறுக்கிட்டு
இருக்கும் கிறுக்கல்களை மட்டுமே.!!
கலாய்ப்பதை படிச்சு அனுபவிங்க ஆராயாதிங்க,

"மேல் வரியில எழுத எவ்வளவோ இடம் இருந்தாலும் அத அப்படியே விட்டுட்டு அடுத்த வரியில எழுத தொடங்கினா அது தான் கவிதை"
அந்த நம்பிக்கையில தான் நான் கவிதை எழுதலாம்னு களத்துல இறங்கிட்டேன்.
"கவிதைக்கு பொய் அழகு- அட பொய் தான் நமக்கு கை வந்த கலை ஆச்சே.!!" என்ற ஆர்வத்தில் காகிதத்திற்கும் பேனா முனைக்கும் இடையிலான காற்றில் கவிதை நயம் அபிநயம் பிடிக்க காத்துக்கிடந்த தருணங்கள் பல.

கவிதைக்கு இன்னொரு முக்கியமான தகுதி முதல் தடவை படிச்சா புரியவே கூடாது.
நான் எழுதுன கவிதை பத்து தடவை படிச்சும் கூட புரியவே இல்லன்னு சிலர் சொன்னப்ப, " அடடே நீ சாதிச்சுட்ட போ"-ன்னு எனக்கு நானே சொல்லி சந்தோசப்பட்டேன். இதுல என்ன சிக்கல்னா, என் கவிதை எனக்கே
சில சமயம் புரியாமல் போனதால சாதிச்சேன்னா இல்ல சொதப்பிட்டேன்னோ-ன்னு சந்தேகமும் வந்தது.
இறுதியாக, "கவிதை நடை இல்லை, தெளிவு இல்லை" என்ற உண்மையான விமர்சனங்கள் உணர்த்தியது, நான் இங்க எழுதுவதெல்லாம் கவிதை அல்ல கிறுக்கல்களே என்று.

என் கிறுக்கல்களும் என்னை சார்ந்த ஒரு சிலருக்காவது என்றாவது கவிதையாய் கண்ணில் தெரியும் என்ற நம்பிக்கையில் கிறுக்கல்கள் தொடரும்...!!

திங்கள், 5 நவம்பர், 2012

காட்சிப் பிழை

அதிகாலை முதல் அந்தி மாலை வரை கண் கொட்டாமல் சுற்றி வந்ததில் சற்று கர்வம் கொண்டேன்.

எங்கு சுற்றினால் என்ன.? பார்வை எல்லைக்குள் இருந்ததில் சற்று அலட்சியம் கொண்டேன்.

பொழுது சாயக் கண்டதும்,
கழற்றி விட்டேன் கர்வத்தை,
விரட்டி விட்டேன் அலட்சியத்தை,
சூட்டிக் கொண்டேன் கண்களில் கலக்கத்தை,
கேட்டுக்கொண்டேன் எனக்குள் நானே,
"யார் அழுதார்கள்,
பூமி தன்னை தானே சுற்றி கொள்ளவில்லை என்று"

'கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் எதற்கு.?'
என்ற ஆறாம் அறிவின் அறிவுரை,
ஆற்றிவிட்டது அடிப்பட்ட அகத்தை.

கண்ணின் காட்சிப் பிழைக்கு,
கதிரவனை மட்டும் குற்றம் சொல்வதில் என்ன நியாயம்.!


வியாழன், 1 நவம்பர், 2012

தலைவியின் நினைவில் தலைவன்

காற்றோடு மழைநீர் கலந்து
சாரலாய் முகத்தில் அடித்தது.
ஜன்னலோரத்தில் காப்பிக்கோப்பையோடு நான்.!
உழைப்பினால் மறந்துபோயிருந்த நினைவுகள்,
களைப்பினால் நான் எடுத்த விடுமுறையன்று.
காற்றோடு கலந்து வந்த சாரலில்,
பத்துத் துளிகளில் பாதித்துளிகள்
கொண்டிருந்தது உந்தன் முகம்தானடி..!

இவண்,

சுட்ட கவிதையை கூட சொந்த கவிதை போல் வெளியிடும் நல்ல உள்ளம் .# பதிவுரிமை தோழியிடம் இருந்து பெறப்பட்டது.:P#